மரங்களை வெட்டி தண்ணீர் தொட்டி கட்டும் பணி: கோவையில் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

சூயஸ் நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் நீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளன. இதற்கு சிவராம் நகர் குடியிருப்பு சங்கத்தினர் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு வாசிகள் இதுகுறித்து கூறியதாவது: இந்த பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பல குடும்பங்கள் இணைந்து ஒரு குடியிருப்பு நல சங்கமாக செயல்பட்டு வருகிறோம். இப்பகுதியில் உள்ள reserved site இடத்தில் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் குழந்தைகள் பொழுதுபோக்கு, முதியோர்கள் நடைபயணம் என குடியிருப்பு பகுதியினருக்கு பெரும் பயனாக இருக்கிறது. மேலும் மரங்களை நட்டு பராமரித்துக் கொண்டு வருகிறோம்.

தற்போது இப்பூங்காவை அகற்றியும், மரங்களை அழித்தும் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். தற்போது ஆட்சி மாற்றத்தால் மீண்டும் இத்தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறினர்.

உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி தண்ணீர் தொட்டி கட்டும் பணியை கை விடவும், மீண்டும் அந்த இடத்தில் பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.