தீவனத் தேவையால் மக்காச்சோளம் விலை அதிகரிக்கும் – தமிழ்நாடு வேளாண் பல்கலை கணிப்பு

தீவனத் தேவையால் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இந்தியாவில் மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டாலும் காரிஃப் பருவத்தில் மட்டும் 85 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021-22 ஆம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 32.4 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உக்ரைன் ஆகியவை மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளாகும்.

இந்தியா 2020-21 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் பூட்டான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரித்ததின் காரணமாக உள்நாட்டு சந்தையில் மக்காச்சோளத்தின் விலை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 2020-21-ஆம் ஆண்டில் 0.4 மில்லியன் எக்டர் பரப்பளவில் 2.56 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலுார் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டிற்கு மக்காச்சோள வரத்தானது ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. இது தமிழ்நாட்டின் மொத்த மக்காச்சோளத் தேவையில் 30 சதவீதம் பங்களிக்கிறது. பீகாரிலிருந்து ஏற்கனவே மார்ச்சில் தொடங்கியுள்ளது. இது ஜுலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டிற்கான, கர்நாடகா மக்காச்சோள வரத்தானது ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது ஜுன் முதல் ஆகஸ்ட் 2022-ல் குவிண்டாலுக்கு ரூ.2400 முதல் ரூ.2500 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

 

Source: Press Release