போரினால் உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு – உலக வங்கி தகவல்

ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்தப் போரில் நாட்டின் உள்கட்டமைப்புகள் மட்டுமின்றி சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக ரஷ்ய படைகள் அழித்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போரால் உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக உலக வங்கித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன்-ரஷ்யா போரால் இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த போர் தொடருமானால் இன்னும் இழப்பு மதிப்பு அதிகரிக்கக்கூடும். உலக வங்கி உக்ரைனுக்கு தேவையான நிதி உதவிகளை செய்யும். இந்த உதவிகள் அனைத்தும் குறுகிய கால சேத மதிப்பீட்டின் கீழ் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.