தொடர் விடுமுறை: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர் விடுமுறையினை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் நாளை மறுநாள் புனித வெள்ளி என்பதால் 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் பணியாற்றுபவர்கள், சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகியுள்ளனர்.

இது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையினை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக, சிறப்புப் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், அரியலூர், மதுரை, நாகர்கோவில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஓசூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு இயக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் சென்னைக்கு திரும்பிட ஏதுவாக, வரும் 17ம் தேதி அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் உத்தரவிட்ட அமைச்சர், பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.