மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு செல்லும்

– சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அரச பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கும் இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தனியார் பள்ளி மாணவர்களை போன்று அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசு தரப்பு வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், மொத்தம் உள்ள மருத்துவ இடங்களில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தகுதியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முறையிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்ட தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தங்களை கவனத்தில் கொள்ள தவறிவிட்டன என்று அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் வாதிடப்பட்டது.