மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு: முதல்வரின் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி – நா.கார்த்திக் புகழாரம்

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுகவின், மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது

உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 விழுக்காடு ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி! இழந்த உரிமை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தினால் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழக அரசு மருத்துவர்களின் சலுகையை மீட்டு தந்துள்ளதோடு, அதன் பலன்களை தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறச் செய்த முதல்வருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.