கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துங்கள்

– சிபிஎம் மன்ற உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மன்ற உறுப்பினருக்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்தி கல்வி நிலையைங்களை மேம்படுத்துவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வெற்றிபெற்ற மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வியாழனன்று காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மன்ற உறுப்பினர்களுக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தின் கோவை மாவட்டத்தின் முடிவுகளை தமிழகத்தின் அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து சட்டமன்ற தொகுதிகளையும் நாங்கள் வென்றோம் உள்ளாட்சி தேர்தலிலும் அனைத்தையும் நாங்கள்தான் வெல்வோம் என்கிற மமதையோடு அதிமுகவும், நாங்கள்தான் எல்லாம் என்கிற வெற்று கொக்கரிப்போடு பாஜகவும் இருந்தது.

ஆனால் தமிழகத்திலேயே கோவை மாநகராட்சியில் மிக குறைந்த அளவிற்கு 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக, ஒரு இடங்களிலும் வெற்றி பெறாதது மட்டுமல்லாமல் 86 வார்டுகளில் டெபாசிட் இழந்த பாஜக என தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு வெற்றியை அள்ளி வழங்கியுள்ளது.

மாநகராட்சியில் மட்டுமல்லாது, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அத்தகைய வெற்றியை ஈட்டி வந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழுவின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி என்பது மிகப்பெரியது. நேரிடையாக மக்களை சந்திப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் அன்றாடம் மக்களோடு இருப்பவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை பெற்றுள்ள நமது கட்சியின் உறுப்பினர்கள் மக்களின் அன்றாட அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் மன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள கல்வி நிலையங்களை மேம்படுத்துவது, தரம் உயர்த்துவதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எளிய குடும்பத்தினர் வீட்டு பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி என்கிற இலக்கில் கவனம் செலுத்தினால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்தை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்ல பேரூதவியாக இருக்கும். அத்தகைய உண்ணதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.