இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சிலை – நேதாஜி குடும்பத்தினர் வரவேற்பு

விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு நேதாஜி குடும்பத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த சிலையின் பணிகள் நிறைவுபெறும் வரை நேதாஜி சிலை அமையும் இடத்தில் அவரது ஹாலோகிராம் சிலை இடம்பெறும். இதனை நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியன்று பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இச்சிலை 28 அடி X 6 அடி என்ற அளவில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜியை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தின் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததாக எழுந்த விவகாரத்திற்கு மத்தியில் பிரதமரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும், சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மகள் அனிதா போஸ், நேதாஜியின் பேரன்கள் சுகதா போஸ் மற்றும் சந்திர குமார் போஸ் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சிலை நிறுவும் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியா கேட் போன்ற நல்ல இடத்தில், இவ்வளவு முக்கியமான இடத்தில் சிலை வைப்பது தனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

திடீரென வந்த இந்த அறிவிப்பு தனக்கு ஆச்சரியமாக உள்ளது எனவும், இதை முன்பே செய்திருக்கலாம். இருப்பினும், தாமதம் என்றாலும் சிறந்த முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

நேதாஜி சிலை நிறுவும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்பதாகவும், நன்றி உணர்வுள்ள நாடு, நேதாஜிக்கு அளிக்கும் மரியாதையாக இதை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்கள் மனதில் தேசபக்தி, சுயமரியாதை தட்டி எழுப்பப்படும் என்றும், சுதந்திரத்தை பராமரிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்யும் உணர்வையும் அளிக்கும் என தெரிவித்துள்ள அவர், நேதாஜி சிலையை நிறுவுவதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.