பூஸ்டர் டோஸ்: கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்து வருகின்றனர். இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என பிரதமர் அறிவித்த நிலையில் அதற்கான கால இடைவெளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் ஒமைக்ரான் வகை தொற்று இந்தியாவிலும் பரவத் தொடங்கியதை அடுத்து  பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதில் முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கும் மேலான முதியவர்களுக்கு வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி தொடர்பான முடிவை தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு இடையே அதிகபட்சமாக 9-12 மாத இடைவெளியை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஜனவரி 16, 2021 முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, பிப்ரவரி மற்றும் மாரச் மாதங்களில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு அடுத்த கட்ட முன்னுரிமை வழங்கப்படும். கடந்த ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்ட மூத்த குடிமக்களுக்கும் இந்த இடைவெளித் தகுதியுடன் பிப்ரவரியில் முதல் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.