கேரளாவிற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைத்த வானதி

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, தெற்கு தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

கோவை இடையர் வீதி அஷ்சய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

இடையர் வீதி  பகுதிக்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் புதன்கிழமை  ராம் நகர் பகுதியிலும், 28-ந்தேதி ராமநாதபுரம் பகுதிகளும், 29-ந்தேதி தெப்பக்குளம் பகுதியிலும் 39-ந் தேதி ராம்நகர்  பகுதியிலும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் நன்றி தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய அதிகாரிகளிடம்  தெரிவித்து தீர்வு காண்பேன் என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் குறைகளை கேட்டு வருவதாகவும் நடவடிக்கைகள் எடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும் மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறிய அவர் சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். தமிழக அரசிடம் சட்டமன்றத்தில் தனது தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து முன்வைக்கபட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டு சில பணிகள் தொடங்கி இருப்பதாகவும், அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

சசிகலா தொடர்பான கேள்விக்கு, சசிகலாவை வரவேற்பதும், வரவேற்காததும் அதிமுகவின் முடிவு எனவும் அதில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்தார். தமிழக அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு ஆளுநர் புதிதாக பதவியேற்றுள்ளார். மாநில அரசிடம் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக கோரிக்கை வைத்திருக்கிறார். தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கேட்டு இருக்கிறார். இதில் எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை எனவும் இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது என்றவர் இது வழக்கமாக நடப்பதுதான் என தெரிவித்தார்.