பிரியங்கா காந்தி கைது: கோவையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் நடத்தினர்.

இதில் அமைச்சர் மிஸ்ராவின் கார் ஏறி இறங்கியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை காணச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சரின் மகன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை இந்த ஆர்ப்பாட்டம் தொடரும்.” என்றார்.