தனியார் நிறுவனங்களுக்கு மணல் விற்பனை செய்ய அனுமதி இல்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வெளிநாட்டில் இருந்து மணலை தனியார் இறக்குமதி செய்தாலும், அதையும் அரசே விற்பனை செய்யும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மணல்குவாரிகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி அரசு மீது குற்றம்சாட்டிப் பேசினார். இதுகுறித்து பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசே அனைத்து மணல் குவாரிகளையும் நடத்தும் என்று தெரிவித்தார்.

மணல் விற்பனையில் அதிக முறைகேடுகள் நடப்பதைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மணல் குவாரிகளுக்கு தடை விதித்தது. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் காலங்களில் அரசே மணல் விற்பனையில் ஈடுபடும். புதிய மணல் குவாரிகளைத் திறப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் நாளை கோரப்பட உள்ளது. விரைவில் அரசு இதை முறைப்படுத்தும். வெளிநாட்டில் இருந்து தனியார் மணல் உற்பத்தி செய்தாலும், அதையும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, கலப்படம் இல்லை என்று ஆராய்ந்த பிறகு அரசே விற்பனை செய்யும். மணல் இறக்குமதி சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.