மொபைல் மருத்துவ சேவை விரைவில் துவக்கம் – ரோட்டரி சங்கம்

ரோட்டரி சங்கங்களின் சமூக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இலவச டயாலிசிஸ் திட்டம் மற்றும் மொபைல் மருத்துவ சேவையை விரைவில் துவக்க உள்ளதாக, ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டியின் நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இணையதள வழியாக நடைபெற்றது. ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டியின் நிறுவன தலைவர் தலைமையில் நடைபெற்ற இதில், விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பிரபல மூத்த வழக்கறிஞர் எம்.சுந்தரவடிவேலு கலந்துகொண்டார்.

கோவை மாநகர ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டி 2021-2022-ம் ஆண்டிற்கான புதிய தலைவராக சந்தோஷ்குமார், செயலாளராக மகேஷ்வரன், பொருளாளராக கனகராஜ் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். சேர்மன்களாக சக்தி, சரவணன், சீனிவாசன், ஜெயராமன், கவுரிசங்கர், டாக்டர் உமா பிரபு, டாக்டர் மகேஷ், சபியுல்லா, மற்றும் பலர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் பேச்சாளர் சோம வள்ளியப்பன் பங்கேற்று தலைமை உரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம், ரோட்டரி இன்டஸ்ட்ரியல் சிட்டியின் நிறுவன தலைவர் பேசுகையில், கோவிட் 19 தொடர்பாக பல்வேறு உதவிகளை ரோட்டரி சங்கம் தொடர்ந்து செய்து வருவதாக கூறிய அவர், ரோட்டரி சங்கங்களின் சமூக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இலவச டயாலிசிஸ் திட்டம் மற்றும் மொபைல் மருத்துவ சேவையை விரைவில் துவக்க உள்ளதாக தெரிவித்தார்.