ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி

கோவையில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான, எஸ்.பி.வேலுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நான்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை வழங்கினார். மேலும் கொரானா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முழு உடல் பாதுகாப்பு கவசம், கையுறைகள், ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் கருவி உட்பட கொரானா நோய் தடுப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து நோய்த்தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கும்,உதவியாளர்களுக்கும் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கும் மதிய உணவுகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார். தடுப்பூசி செலுத்த காலை முதல் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு மதிய உணவுகளை வரவழைத்து, அனைவருக்கும் உணவுகளை வழங்கினார்.