பொது நிவாரண நிதியிலிருந்து கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்காக 25 கோடி ரூபாய் முதலமைச்சர் ஒதுக்கீடு

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் : “தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் உதவும் வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள்க்கிணங்க இன்று (7.6.2021) வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.

தற்போது கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்”. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.