பா.ஜ.க எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது – அண்ணாமலை

பா.ஜ.க எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது, மத நம்பிக்கையை அவமானம் செய்யும் கட்சி கிடையாது என அக்கட்சியின் தமிழக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை ராஜவீதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின் மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மத்திய அரசின் 191 திட்டங்கள் மக்களுக்காக நடைமுறையில் இருக்கின்றது, அரசு தனியாக திட்டங்களை கொண்டு சென்றாலும், தொண்டு நிறுவனங்கள மூலம் இணைந்து செயல்படுவதன் மூலம் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைகின்றது என தெரிவித்தார். அரசியலை தாண்டி திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றது.

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க நிர்வாகி குறித்த கேள்விக்கு

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனின் பேச்சு சர்ச்சையாக இருக்கின்றது என்றால், நீதிமன்றம் அதை முடிவு செய்யட்டும் எனவும், கல்யாணராமன் போராட்டத்தில் பேசினார், அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அதற்குள் போக விரும்பவில்லை, சட்டம் தன் கடமையை செய்யட்டும் என தெரிவித்தார்.

பா.ஜ.க எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது,மத நம்பிக்கையை அவமானம் செய்யும் கட்சி கிடையாது என கூறிய அவர், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு முக்கியமான தீர்க்கதரிசி, நிச்சயமாக அவர்கள் நபியை கும்பிட அவர்களுக்கு ரைட்ஸ் உண்டு என தெரிவித்தார்.