தமிழக ஆளுநர் பேரூரில் சுவாமி தரிசனம்

கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று (17.12.2020) மாலை நடைபெறவுள்ள 41வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரசித்தி பெற்ற தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆளுநருக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தார். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள பசுவுக்கு தீவனம் வழங்கிய அவர் கோவில் யானையான கல்யாணி இடம் ஆசி பெற்றார். ஆளுநரின் பேரூர் வருகையால் சிறுவாணி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.