பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் இன்று 15.12.2020 ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விடுபட்ட சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதிகளிலும், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் புதிதாக சாக்கடை குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆணையாளர் தெரிவித்ததாவது, புதிதாக பாதாள சாக்கடை இணைக்கப்படவுள்ள கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் அந்தந்த இடங்களில் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு பிரதான கழிவுநீர் நீருந்து நிலையம் மூலமாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு அருகிலுள்ள சங்கனூர் பள்ளம் ஓடை வாயிலாக நொய்யல் ஆற்றிலும், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளில் பெறப்படும் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு இதைப்போலவே சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அருகிலுள்ள குமாரசாமி (முத்தண்ணன்) குள கடைவழி ஓடை வாயிலாக நொய்யல் ஆற்றிலும், இதைப்போலவே கோவை மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் விடுபட்ட பகுதிகளான பேஸ் 3-ல் கணபதி, கணபதி மாநகர், தண்ணீர்பந்தல், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

இவ்விடங்களில் கழிவு நீர் சேகரிக்கப்பட்டு, ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள 60MLD கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. இத்திட்டம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மேற்கண்ட பகுதிகள் சுகாதாரமான, தூய்மையான பகுதிகளாக உருமாறும் என்பதில் ஐயமில்லை என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை ஆணையாளரிடம் தெரிவித்து அதனை மனுக்களாகவும் வழங்கினார்.