கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: விடுமுறைகளை அனுமதிக்கக் கோரி கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அண்ணா பல்கலைக் கழகம் கடந்த 2012ஆம் ஆண்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு கோவை மண்டல வளாகமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் இங்கு பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் தற்செயல் விடுப்பு போன்ற விடுமுறைகளை தடுக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் விடுமுறைகளை தொடர்ந்து அனுமதிக்கக் கோரி கோவை மண்டல பல்கலைக்கழக  வளாகத்தில் அனைத்துப் பணியாளர்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக டீன் ரவிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.