ஆறு  மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அண்ணா காய்கறி மார்கெட் – வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மூடப்பட்ட கோவை சாய்பாபா காலணி அண்ணா காய்கறி மார்க்கெட் இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா கோவில் அருகில் அண்ணா காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது, இங்கு கடந்த ஏப்ரல் மாதம் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து காலவரையின்றி மூடப்பட்டது. அதற்கு மாற்றாக தடாகம் சாலையில் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. ஆனால் மழையின் காரணமாக கல்லூரி மைதானத்தில் தண்ணீர் தேங்குவதால் வியாபாரிகள் பாதிக்கப்படவும் மீண்டும் மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் கடையை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணா காய்கறி மார்க்கெட்டை திறக்க அனுமதிப்பது  தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் கடந்த 3ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து கடைகளை திறக்க அனுமதி அளித்தார். இந்த நிலையில் அண்ணா காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில் மார்க்கெட்டில் மொத்தம் உள்ள 476 கடைகளில் தினசரி 150 கடைகள் மட்டும் இடம் பெறும் வகையில் சுழற்சி முறையில் திறக்கவும், இரு கடைகளுக்கு இடையே ஒரு கடையை காலியாக விட்டு சமூக  இடைவெளியுடன் வியாபாரம் மேற்கொள்ளவும், கடைகளை அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே செயல்படும், அதிகாலை 3 மணிக்கு முன்னரே சரக்கு வாகனங்கள் காய்கறிகள்  உள்ளிட்டவற்றை இறக்கி விட்டுச் செல்லவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் இன்று (7.10.2020) அண்ணா மார்கெட் திறக்கப்பட்டது.