கல்வியாளர் மரியா மாண்ட்டசரி பிறந்த தினம்

இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்விமுறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மாண்ட்டசரி 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.

நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். இதன் மூலம் குழந்தைகள் பாடங்களை எளிதாகக் கற்றனர். இந்த முறை உலகெங்கும் பரவியது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இவருக்கு அழைப்பு விடுத்தார்கள். அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்விமுறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்விமுறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.

தனது புதிய கல்விமுறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907ஆம் ஆண்டு முதல் வகுப்பைத் தொடங்கினார். இது மாண்ட்டசரி கல்விமுறை எனப் பிரபலமடைந்தது. பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது. புதுமைக் கல்வித் திட்டத்திற்கான கோட்பாடுகளை 1897ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மாண்ட்டசரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார்.

இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்விமுறையை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மாண்ட்டசரி 1952ஆம் ஆண்டு மறைந்தார்.