தனியார் இ-சேவை மையம் திறப்பு விழா

கோவை புலியகுளம் பகுதியில் தனியார் இ-சேவை மையத்தை பா.ஜ.க மாநில  துணைத் தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி  வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் கோடிக்கு மேலாக தமிழகம் பெற்றிருக்கின்றது. கொரோனாவிற்கு 6600 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி இருக்கின்றது.

தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும் நேரடி அரசை போல எந்த வேறுபாட்டையும் காட்டாமல் திட்டங்களை வழங்கி வருகிறது. தி.மு.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்லி திசை திருப்ப பார்க்கின்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான அலை இருக்கும் என்பதை  பா.ஜ.க கூற விரும்புகின்றது.

ரஜினியின் அரசியல் பயணமே ஆன்மீக பயணம். ஆனால் பிற மதங்களை இழிவுபடுத்துபவர் அல்ல ரஜினிகாந்த் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்பது பொலிட்டிக்கல் அரேஜ்மென்ட் மட்டுமே. பா.ஜ.க  தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

பிரேமலதா விஜயகாந்த் அவருடைய கட்சியின் ஒரு நோக்கத்தை சொல்லி இருக்கலாம். ஆனால், தேசிய  ஜனநாயக கூட்டணி இப்போது வரை தொடர்ந்து வருகின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் களம் நெருங்க, நெருங்க கூட்டணி செயல்பாடுகளில் கட்சிகள் விருப்பங்களை சொல்வது வாடிக்கையான விஷயம்தான். தேர்தல் நெருங்கும் போது  பா.ஜ.க தலைமையில் தனியாக ஒரு அணி உருவாகுமா என்ற தகவல் தெரியவரும்.

எங்களுக்கு ஆர்வம் இருக்கின்றது. சூழல் மாறிக்கொண்டு இருப்பதை உணர்கின்றோம். செல்வாக்கு இல்லாத பகுதிகளில் இப்போது  செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. தேர்தலுக்குள்ளாக நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதை சொல்லி வருகின்றோம். அதை அடையும் வரை கூட்டணி இருக்கும் என்றார்.