பூக்கள் வரத்தும், வாங்கும் ஆர்வமும் குறைந்துள்ளது

மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பன்

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளை முன்னிட்டு வழக்கத்தை விட பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாக கோவையில் பூ வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது  வழக்கமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகின்ற நிலையில் கொரோனா கால ஊரடங்கால் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்க அரசு மறுத்துள்ளது. இதனால் பொது மக்கள், வீடுகளிலேயே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளதால் குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை கோவையில் சூடு பிடித்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா கால ஊரடங்கால் பூக்கள் விற்பனை வழக்கத்தை விட மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் அய்யப்பன் பேசுகையில், கோவை பூ மார்க்கெட்டுக்கு தினமும் மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை உள்பட பல்வேறு வகையான பூக்கள் மற்றும் சம்பங்கி, செவ்வந்தி, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்டவை வெளி இடங்களில் சாதாரணமாக வருவதை காட்டிலும் குறைவான வரத்தே இருப்பதாகவும், மேலும் வழக்கத்தை விட பூக்கள் வாங்க இந்த வருடம் பொதுமக்களிடம் அதிக ஆர்வம் காட்டாததால் வியாபாரம் மந்தமாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

கேரளாவிலும் ஓணம் பண்டிகை தற்போது கொரோனா பாதிப்பால் தவிர்க்கப்பட்டு வீடுகளில் எளிய முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளதாலும் விற்பனை சரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.