பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பிறந்த தினம்

மொழிகளுக்கு இடையே அறிவைப் பரிமாறிய பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா 1933ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் பிறந்தார்.

தன் விடாமுயற்சியால் பல மொழிகளை கற்றுக்கொண்டார். பிறகு தமிழின் மேன்மைமிக்க இலக்கியங்களான திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் இயற்றிய ஆமுக்த மால்யத (சூடிக் கொடுத்தவள்) என்ற காவியத்தை 1988ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்தார். இதுவே தமிழ் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கிய முதல் நூலாகும்.

முத்தொள்ளாயிரம், தமிழும் பிராகிருதமும், இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994), திராவிட மொழிகளில் யாப்பியல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இவர் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.