ஆன்லைன் வகுப்புகள் நடத்த புதிய வழிமுறைகள்- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், 6-ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரி விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஆல்லைன் வகுப்புகளில் தொடர்ச்சியாக பங்கு பெறுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும் என்றும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என மத்திய அரசு விளக்கமளித்தது.

மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய வதிமுறைகளை மாநில அரசுகள் வகுத்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து ஜூலை 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

 

Source : Malai Malar