கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

கோவையில் இன்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இருவர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 14ம் தேதி குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதியவருக்கு ஏற்கனவே சர்க்கர நோய், ரத்த அழுத்த நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

மேலும், செட்டி வீதி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் இவரும் உயிரிழந்துவிட்டார்.

இதன் மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.