கோவையில் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

கோவை ரூரல் எஸ்.பி., சுஜித் குமார் உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தமிழக அரசு 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இதில் கோவை ருரல் எஸ்.பி.,யாக இருந்த சுஜித்குமார், மதுரை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். இவரது பணியிடத்துக்கு நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த அருள்அரசு நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர போலீஸ் சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக பதவி வகித்து வந்த பாலாஜி சரவணனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பணியிடத்துக்கு மதுரை மாவட்ட குடிமைப்பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கோவையில், லஞ்ச ஒழிப்பு துறையில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர்.

இதேபோல், கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த செல்வகுமார், திருப்பூர் மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். இவரது பணியிடத்துக்கு திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.