அக்டோபர் 7, 12 தேதிகளில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு; தமிழகம்????

அக்டோபர் 7 மற்றும் 12-ஆம் தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையால் நாடு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவ மழை நிறைவு பெற்றதும் இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு (2016) போதிய அளவு பெய்யவில்லை. இயல்பை விட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவியது.

மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. தென் மேற்கு பருவ மழை தொடங்கியதால் நிலைமை சமாளிக்கப்பட்டது.

இந்த வார இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்குகிறது. இதையடுத்து வரும் 7 மற்றும் 12-ஆம் தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

முதலாவது புயல் 11-ஆம் தேதி வாக்கிலும், 2-வது புயல் 15-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதி வாக்கில் கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. முதலாவது புயலின் போது தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும்.

மேற்கண்ட கண்ட தேதிகளில் உருவாகும் இரு புயல்களுமே கடலூருக்கும், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் அதிகமான அளவில் சேதம் இருக்கும்.

இந்த புயல்களால் 111 சதவீத அளவுக்கு இயல்பை விட கூடுதலான மழை பெய்யும்.

மேலும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி கோடியக்கரைக்கும், கடலூருக்கும் இடையே பலவீனம் அடையவும் வாய்ப்புள்ளது.

புயல்கள் காரணமாக வடகிழக்கு பருவ மழை வருகிற 26-ஆம் தேதி தொடங்கும். வழக்கமான அளவுக்கு மழை பெய்யும். மத்திய மற்றும் தென் தமிழ் நாட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.