தேஜஸ் போர் விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

மேம்படுத்தப்பட்ட தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் , கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திய விமான படையில் இணைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் 18 வது விமானப்படை அணி மறுஉருவாக்கம் செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் ஏற்கனவே தேஜஸ் மார்க் 1 ஐ.ஓ.சி வகையைச் சேர்ந்த 20 விமானங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் இதில் கூடுதல் வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி ரக போர் விமானம் இந்திய விமான படையில் சேர்க்கப்பட்டது.

சூலூரில் உள்ள இந்திய விமான தளத்தில் இந்திய விமானப் படை தலைவர் ஏர்சீப் மார்சல் பதோரியா முன்னிலையில் இந்த தேஜஸ் மார்க் 1 எப்.ஓ.சி விமானம் விமானப்படையில் இணைக்கப்பட்டது. நவீன ரக தேஜஸ் விமானம் இருந்த அரங்கை ரிப்பன் வெட்டி இந்திய விமான படை ஏர் சீப் மார்ஷல் பதோரியா திறந்து வைத்தார். பின்னர் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்ட சர்வ தர்ம பூஜா நடத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய விமானப்படை ஏர்சீப் மார்ஷல் பதோரியா  விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசியதாவது, சூலூர் விமானப் படைத் தளத்தில் இரண்டாவது தேஜஸ் எப்.ஒ.சி. விமானம் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேஜஸ் விமானம் அதிநவீன தொழில்நுட்பதிலும் முதன்மையானது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் இது என்பதும் நமக்கு பெருமை.

இந்திய விமானப்படையினருக்கு தேவையான உபகரணங்கள், விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்க தனியார் தொழில்துறையினர் மற்றும் சிறுகுறு தொழில்துறையினர் முன் வரவேண்டும் என்றார்.