மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

கோவை தடாகம் பகுதியில் உள்ள முத்து எம்பவர் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் சமமான முறையில் பணி செய்யும் நோக்கத்தில் நடத்தி வரும் இந்த பயிற்சி பட்டறையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் ஆகியோர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய நிலையில் தொழில் துறை மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முத்து எம்பவர் அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் சிந்துஜா  மற்றும் போரே கவுடர் திருமண மண்டபத்தின் உரிமையாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி ஆகியோர் இணைந்து  மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூபாய் ஆயிரத்திற்கான காசோலை மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் அடங்கிய மளிகை நிவாரண உதவி பொருட்களும் வழங்கினர்.

கே.என்.ஜி்.புதூரில் உள்ள சுசின் டெக்னாலஜிஸ் வளாகத்தில் நடைபெற்ற இதில் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்று கொண்டனர்.