கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

அதிலிருந்து சில வரிகள் (வழிகள்)

தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்குத் தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை. ஏழைக்குத் தொப்பையை நிறைப்பது கவலையென்றால், பணக்காரருக்குத் தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு, பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு. அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு. சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதுண்டு.
அமெரிக்காவில் பகல் என்றால், இந்தியாவில் இருட்டு. பிரச்னை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை. ஆக, அடுத்தவர் நன்றாக வாழ்வதுபோலவும் நாம் மட்டும்தான் கஷ்டப்படுவதுபோலவும் பிரமை வேண்டாம்.
கணவர் வீட்டுக்கு வரும்போதே பிரச்னையோடு வரக் கூடாது. மனைவியும் அவரை கேள்விக்குறிகளோடே வரவேற்கக் கூடாது. கணவர் எதையும் அடித்துச் சொல்லக் கூடாது. மனைவி எதையும் இடித்துப் பேசக்கூடாது.

“நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம்” என்று மனைவி சொன்னால்.. “எந்த நாய் சொன்னது?” என்று கணவன் பதில் சொன்னால்தான் பிரச்னை. தன் தவறை ஒத்துக்கொண்டு, “சரி இனி பார்த்து வாங்குகிறேன்” என்று சொல்லி விட்டால் முடிந்தது. “நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால், “எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான்.. நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்று மனைவி பதில் சொன்னால்தான் பூகம்பம் ஆரம்பம். “இன்னிக்கு உடம்பு முடில.. நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொன்னால் அன்பு வெள்ளம்தான்…
மனைவி புதுப்புடவை உடுத்தினால்….”இந்தப் புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே” என்று சொல்லணும். கணவன் வெளியிலிருந்து வரும்போது, “ஏன் இப்படி வியர்த்திருக்கிறது.. எளச்சு போய்ட்டீங்களே” என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் “அம்மா” என்று அழைக்கணும், கணவனை மனைவி “அப்பா” என்று அழைக்கணும். தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி. தன் தாய் வீட்டை கணவன் பெருமையாகக் கூறினால் மனைவிக்கு நிம்மதி.
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்துவிட வேண்டும். முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. வார்த்தைகளில் ஜாக்கிரதை. எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம், சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது. முள்ளால குத்தின காயம் ஆறிடும், சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கிக்கொள்ள முடியும். இரண்டு கைத் தட்டினால்தான் ஓசை என்பார்கள். ஒருவர் கோபம் கொள்ளும்போது இன்னொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
“பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் “என்றும், “கணவன் தானே.. பேசட்டும்” என்றும் விட்டுக்கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது.. உடல் வலிக்காது.. ஊர் சிரிக்காது. வாழ்க இல்லறம்!