‘கொரோனா – சீனாவின் உயிரியல் ஆயுதமா? அல்லது இயற்கை வைரஸா?’ – விளக்கும் விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் இயற்கையானதா அல்லது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமா என்ற கேள்விக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உகான் நகரில் தோன்றியதால் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய உகான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

சீனாவின் அதி நவீன வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகமான உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி தான் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட சீனாவின் ஒரே ஆய்வுத்தளமாகும்.

சீன உயிரியல் ஆயுதம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறும் போது,

இந்த உகான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது. இந்த இன்ஸ்டிடியூட்டில் உள்ள சில ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை. உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள் உள்ளூர் – இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன என கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் என சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் கொரோனா இயற்கையான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் மரபணு வரிசை தரவுகளை ஒப்பிடுவதன் மூலம், சார்ஸ் மற்றும் சிஓவி-2 இயற்கையாக உருவானது என்பதை நாங்கள் உறுதியாக தீர்மானிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.