எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரி யானை !

இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 15ம் தேதி இரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்றனர்.

திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று. இந்த டிக்கிரியின் புகைப்படத்தை சேவ் எலிபேண்ட் என்ற அமைப்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் யானை எழும்பும் தோலுமாக உள்ளது. யானை என்றாலே பிரம்மாண்ட உருவத்துடன் கொழு கொழுவென்று பார்த்து ரசித்தவர்கள் இந்த யானையின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தனர்.

இந்த டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர். அதனால், டிக்கிரி மிகவும் கஷ்டப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. டிக்கிரியின் புகைப்படம் பலரின் நெஞ்சத்தை நொறுக்கியுள்ளது.