உடல் போல் மன நலமும் பேண வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் மற்றும் ஆரோக்கியா மருத்துவமனையும் இணைந்து வழங்கும் நலந்தானா – நலம் நம் கையில் ஆரோக்கியத் தொடர் உரை நிகழ்ச்சியின் ஆறாம் நாள் நிகழ்வில் ‘உள்ளம் பேண் உடல் நலம் வரும்’ என மன நலன் முக்கியத்துவம் குறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின் மன நல நிபுணர் மருத்துவர் இ.சண்முகம் பேசினார்.

‘மனநலன் சார்ந்த பிரச்சனைகளை தனக்கு உள்ள பலவீனமாக நினைத்து மறைத்து வாழ்கிறார்கள்.  அது ஒரு ஆரோக்கியக் குறைபாடு தான். கட்டாயம் ஆலோசனைகள் வழியாகவும், மாத்திரைகள் வழியாகவும் சரி செய்ய வேண்டும். மன நல சீர்கேட்டினால் தனி நபருக்கு மட்டும் பிரச்சனை இல்லை, அவரது குடும்பத்திற்கு, சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது. திருவள்ளுவர், மன நலம் மண்ணுயிர்க் காக்கும் என்கிறார். சமீப காலங்களில் நம் சமூகத்தில் தற்கொலை, கொலை, பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறி மன நலச் சீர்கேடு சமூகத்தில் அதிகரித்துள்ளதற்கான அறிகுறி.

உலகளவில் ஒரு வருடத்துக்கு 30 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்கொலை அதிகரித்து வருகிறதாகவும் தெரிவிக்கிறது. தற்கொலை போன்றவற்றுக்கு காரணம் மன நலம் ஆரோக்கியமாக இல்லாததுதான்.

சமீப காலங்களில் மனச்சோர்வு என்ற வார்த்தை சிறியவர் முதல் பெரியவர் வரை எளிதாக புழங்குகின்றது. மனச்சோர்வுக்கு காரணம் சிறு வயதில் இருந்தே பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கற்றுக் கொடுக்காமல் பெற்றோர்கள் இருப்பதே. பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி வாழவே பெற்றோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக இந்தத் தலைமுறைப் பிள்ளைகளால் எந்தப் பிரச்சனையும் எதிர் கொள்ள முடியாமல் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். தற்கொலை போன்ற முடிவுகள் எடுக்கிறார்கள்.

பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழக்குதல், மனம் விட்டு பேசுவது, நேர்மறையான வார்த்தைகளைக் கூறுவது, ஊக்கப்படுத்துவது, உள்ளிட்டவற்றால் இளம் தலைமுறையினரை மனச்சோர்வில் இருந்து மீட்க முடியும். மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்யப் பழக்கப்படுத்த வேண்டும். மன நலப் பிரச்சனைகள் சரி செய்யக் கூடிய பிரச்சனை தான். பிரச்சனைகள் இருந்தால் தயக்கப்படாமல் மன நல மருத்துவரை அனுகி ஆலோசனைகள், மாத்திரைகள் வழியாக சரி செய்து கொள்ளலாம்’ என்றார்.

அடுத்து உணவே மருந்து என்ற தலைப்பில் ஒலிம்பிக் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விளையாட்டு ஊட்டச் சத்து நிபுணர் டாக்டர் ஷைனி பேசினார். அவர் ‘ ஒரே எடையுள்ளவர்கள் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடு உடலுக்கு உடல் மாறுபடும். ஆகவே உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடு மட்டுமே உடல் இளைக்க போதுமானதல்ல. தசைகள் எவ்வாறு உள்ளன என்பதை சோதித்து அறிந்து கொள்வது நல்லது. சம்மணங்கால் போட்டோ அல்லது குத்தவைத்து உட்காரவோ முடியாது என்றால் ஃபிட்னெஸ் குறைபாடுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடல் பரிசோதனைகளின் போது இன்சுலின் சுரப்பிகளின் செயல்பாடுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கழுத்தைச் சுற்றி மருக்கள் தோன்றுவது வெறும் தோல் பிரச்சனை அல்ல. இன்சுலின் குறைபாட்டின் ஆரம்பமாகவும் இருக்கலாம். புற்றுநோய் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. உண்ணும் உணவும் சூழலும் மாசுபடுவதே காரணம். உணவில் கோதுமை, மாமிசம் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது பலனளிக்கும்.

சாப்பிட்ட 2 மணி நேரத்தில் பசியெடுப்பதும் ஏதாவது இனிப்பை சாப்பிட தோன்றுவதும் இன்சுலின் குறைபாடின் அறிகுறிகள். நடைப்பயிற்சி, யோகா, உடல்பயிற்சி, சைக்கிளிங், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் அவசியம். சூரிய நமஸ்காரம், நீச்சல் ஆகியன ஆரோக்கிய வாழ்விற்கானவை. இரவில் தாமதமாக தூங்குதல் கூடாது.

சாப்பிடும் போது டிவி, செல்போன் போன்ற கவனச்சிதறல் கூடாது. அன்றாட செயல்பாடுகளில் உற்சாகமாக ஈடுபட வேண்டும். சோம்பல், பகல் உறக்கம் ஆகாது என்று பேசினார். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.