கோவை பேருந்து நிலையத்தில் 25 கடைகள் இடித்து அகற்றம்

கோவை காந்திபுரம், மாநகர பேருந்து நிலையத்தில்  இருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

இதனால்  காந்திபுரம் மாநகர பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் வருவதும், போவதுமாகவே இருப்பார்கள். இந்த  பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையாளருக்கு  புகார்கள் வந்தன.

புகாரின் பேரில் மாநகராட்சி  ஆணையாளர்  பிரதாப் உத்தரவின் படி  மத்திய மண்டல உதவி  ஆணையாளர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பேருந்து நிலையத்திற்கு வந்தனர். மேலும் அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.