இலங்கையின் புதிய பிரதமராக ரணில்? – விரைவில் பதவியேற்பு என தகவல்

இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என அதிபர் கோட்டபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று அல்லது நாளை பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இலங்கையில் நிலவி வரும் நிதி நெருக்கடியால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அவசரநிலை அறிவித்த நிலையிலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல இடங்களில் கலவரம், வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்சே, இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவை உருவாக்கப்படவிருப்பதாக மக்களிடம் உரையாற்றிய போது அறிவித்திருக்கிறார். மேலும், புதிய ஆட்சியின் பிரதமருக்கு புதிதாக வேலை திட்டத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டை முன்னேற்றி செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். அதுவரை மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசி வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் எனவும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.