கோவையில் போக்குவரத்து விதியை மீறியவர்களை நிழலில் அமர வைத்து போலீசார் அறிவுரை

போக்குவரத்து விதி மீறல்களை மீறும் நபர்களை பிடித்த போலீசார் அவர்களை மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அறிவுரை வழங்கியுள்ளனர்.

கோவை மாநகர பகுதியில் தினந்தோறும் லட்சகணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனிடையே அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் நூதன முறையில் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

அதில் கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் ஹெல்மெட் அணியாமல், வெள்ளை கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துதல், சிக்னலில் பச்சை, மஞ்சள் விளக்குகளை தாண்டி சிவப்பு விளக்குகள் ஒளிர்ந்த பின்னரும் சிக்னலில் நிற்காமல் வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாக கடை கடைபிடிக்காமல் சென்ற பத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை பிடித்தனர்.

பின்னர் சிக்னல் அருகே மரநிழலில் இருக்கை போட்டு அமர வைத்து அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுரைகளை வழங்கினர். மேலும், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறினர்.