“அனைத்து சமுதாய மக்கள் ஒரே இடத்தில் வசிப்பதற்காகவே சமத்துவபுரம்”

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் 100 வீடுகளுடன் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பெரியார் நினைவு சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அங்குள்ள பெரியாரின் உருவ சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த ஜனவரியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில், 1997 முதல் 2001ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட 145 பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் இந்த ஆண்டு முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா நடைபெற்றது.

அதன்பிறகு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார். தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடல், ரேஷன்கடை ஆகியவற்றை திறந்து வைப்பதோடு, அதே வளாகத்தில் நூலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என்பதற்கு சமத்துவபுரம் கிடப்பில் போடப்பட்டதே சாட்சி. சமத்துவபுரங்கள் அதிமுக ஆட்சியில் சரிவர பராமரிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்த குறையும் இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

அனைத்து சமூக மக்களும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வசிக்கும் சமத்துவபுரம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. அனைத்துக்கும் முன்னோடியான தமிழ்நாடு சமத்துவபுரத்திலும் முன்னோடியாக இருக்கிறது.

பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றவே சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார். பெரியார் இல்லையென்றால் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. 1997 ஆம் ஆண்டு கலைஞரால் சமத்துவபுரம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 238 சமத்துவபுரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தோன்றாமல் போயிருந்தால் தமிழ் சமூகம் முன்னேறி இருக்காது. சாதி என்ற அழுக்கை சுமந்து வந்த சமூகத்துக்கு பகுத்தறிவு ஊட்டியது திராவிட இயக்கம் தான் என்று பேசினார்.