“எங்களுடன் நின்று போரிட யாருமில்லை” – உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டின் மீது நேற்று போர் தொடுத்த ரஷ்யப் படைகள் இரண்டாவது நாளாக இன்றும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை ரஷ்யா தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ரஷ்யா உடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும், எங்களுடன் நின்று போரிட யாருமில்லை என்றும் உருக்கமாக கூறியுள்ளார். எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை.

வீரர்கள், பொதுமக்கள் என இதுவரை எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளதாகவும் 316 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தனது குடும்பத்தினருடன் இன்னும் கீவில் இருப்பதாகவும், ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கின்றோம் என்றார்.

பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பப்போவதில்லை என்றும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ளார்.