உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு நாள் இன்று!

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு போராடிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு நாளையொட்டி அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

விவசாயிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பலர். அவர்களில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த சி. நாராயணசாமி நாயுடு மிகவும் முக்கியமானவர். கோவைக்கு அருகில் உள்ள செங்காலிபாளையம் என்ற கிராமத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு,

திருமணத்துக்குப் பிறகு விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஒரு விவசாயியாக இருப்பது எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை உணர்ந்தார். 1950-களின் தொடக்கத்தில் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட இடர்களினாலும், அரசின் தொழிற்துறைக்கு ஆதரவான நிலைப்பாட்டாலும் விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

இதனால் நீர் பாய்ச்ச வழியின்றி பயிர்கள் வாடின. இதை எதிர்த்து 1957-ல் நாராயணசாமி நாயுடு கோவைப் பகுதி விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்தியதோடு, மீண்டும் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்சாரத்தைப் பாசனத்துக்குப் பெற்றுத்தந்தார். இதுதான் நாராயணசாமி நாயுடு நடத்திய முதல் வெற்றிப் போராட்டம். தொடர்ந்து இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுளார்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு போராடிய உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு வின் 37வது நினைவுநாளான இன்று கோவை கோவில் பாளையம் பகுதியில் உள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட கோவையை சேர்ந்த 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.