உயிரணுக்களுக்கு ஊட்டமளித்து சிகிச்சை: ‘மிராக்கிள்’ தலைவர் மாணிக்கம் பேட்டி

மைட்டோகாண்டிரியா என்ற உயிரணுக்களுக்கு ஊட்டம் அளித்து நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் நோய்களை குணப்படுத்த முடியும் என்று ‘மிராக்கிள் வெல்னெஸ் கிளினிக்’ தலைவரும், ஏ.பி.டி நிறுவனத்தின தலைவருமான மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மிராக்கிள் வெல்னெஸ் கிளினிக் என்ற மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் கிளை தற்போது கஸ்தூரிபா நினைவு வைத்திய சாலையில் தொடங்கப்பட்டது. இதில் பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில்: “வேத ரிஷிகளின் ஆய்வும், இன்றைய நவீன மருத்துவத்தையும் கலந்து தான் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இது போன்ற மருத்துவமனை இல்லை. துணிச்சலான முடிவு எடுத்து செயற்கரிய காரியங்களை செய்ய சிலரால் மட்டுமே முடியும்.

லாப நோக்கில்லாம தொடங்கப்பட்டுள்ளது இந்த மருத்துவமனை. தனது பணத்தை மக்களுக்காக செலவு செய்யும் மனிதர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்” என்றார்.

தொடர்ந்து ‘மிராக்கிள்’ மருத்துவமனை தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா காலத்தில் மிராக்கிள் என்ற வைட்டமின் சி பானத்தை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு வழங்கினோம். மைட்டோகாண்டிரியா என்ற உயிரணு நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். அவைகளே நமது உடல் நலனைத் தீர்மானிக்கின்றன.

இதன் செயல்பாட்டில் குறைபாடு இருந்தால் தான் நோய்கள் நம்மை தாக்கும். பழங்காலத்தில் சித்தா மூலம் உயிரணுவுக்கு ஊட்டம் வழங்கப்பட்டது. அதனை அறிவியல் ரீதியான ஆராய்சிக்கு உட்படுத்தி இந்த மருத்துவமுறை தொடங்கப்பட்டது.

அனைத்துவிதமான நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. வைட்டமின் சி, மெக்னிசியம், ஐயோடின் உள்ளிட்ட மூலக்கூறுகளுடன் ஊட்டம் அளிக்கப்படுகிறது. அனைத்து வித நோய்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், மிராக்கிள் மருத்துவமனை மருத்துவர் அருள் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.