திருநங்கைகளின் ஓவியம் அமெரிக்க கண்காட்சிக்கு தேர்வு!

அமெரிக்காவில் உள்ள ஓவியக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த 8 திருநங்கைகளின் ஓவியங்கள் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருநங்கை கல்கி சுப்பிரமணியம்.

இவர் கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஓவியரும், கவிஞரும், சிறந்த பேச்சாளருமான நான் சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான பல விருதுகளை பெற்றுள்ளேன். சகோதரி என்ற அறக்கட்டளை நிறுவி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான சேவையை செய்து வருகிறேன். இந்த மனித உரிமை செயல்பாடுகளுக்காக அமெரிக்க அரசாங்கம் என்னை கௌரவித்தது. திருநங்கைகளின் திறமைகளை உலகம் அறியும் அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், கலை மற்றும் ஓவிய பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளாக அளித்து வருகிறேன்.

500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் என்னிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் எங்களிடம் ஓவியம் பயின்று வரும் ஏழு திருநங்கைகள் மற்றும் ஒரு திருநம்பி உட்பட 8 பேரின் ஓவியங்களை அனுப்பி வைத்தோம். அவர்கள் அதனை தேர்வு செய்து கண்காட்சியில் வைக்க உள்ளனர். இந்த கண்காட்சி அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி வரை ஆறு மாதம் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் உள்ள திருநங்கைகள் வரைந்த ஓவியங்களிடையே தமிழகத்தைச் சேர்ந்த 8 திருநங்கைகளின் ஓவியங்கள் இடம் பெறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு என தனியாக கலைக் கூடம் அமைக்க முடிவு செய்துள்ளோம். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் உள்ளது. இந்த கூடத்தில் நாங்கள் திருநங்கைகளின் ஓவியங்களை காட்சிப்படுத்த முடிவு செய்து உள்ளோம். எனவே தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். திருநங்கைகளை அரசு அரவணைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.