கோவை கௌமார மடாலய வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ராஜகோபுரத்தின் கும்பாபிஷேக விழா 25 ம் தேதி நடைபெற உள்ளது.
சின்னவேடம்பட்டி பகுதியில் 130 ஆண்டுகள் பாரம்பரியமிக்க கௌமார மடாலயத்தில், தஞ்சை பெரிய கோவிலின் ராஜகோபுரத்தை நினைவு படுத்தும் வகையில் கோவிலின் வடக்கு பகுதியில் 50 அடி உயரத்தில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கௌமார மடாலயத்தின் தலைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூராதினம் தவத்திரு மருதாச்சல அடிகளார் ஆகியோர் பேசுகையில்,
கௌமார மடத்தின் வளாகத்தில் கடந்த 1908 ஆண்டு அருள்மிகு தண்டபாணி கடவுள் கோவில் அமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் விநாயகர் கோவில், அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், சூரியன் கோவில், பைரவர் கோவில், சனி பகவான் கோவில் என தனித்தனியாக உருவாக்கப்பட்டது என்றும் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் ராஜ கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் 50 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
இதில் தலைமை விருந்தினராக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் முக்கிய ஆதீனங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் தொழிலதிபர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.