பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று (16.12.2020) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் 400 குறுசிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தத் தொழிலைச் சார்ந்து இயங்கி வரும் வெட்கிரைண்டர், என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும்.