முத்தையா முரளிதரன் நீலி கண்ணீர் வடிக்கிறார்

தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர்

முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து அவர் நடிக்க கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றார்.

இந்நிலையில் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் முத்தையா முரளிதரன் நீலி கண்ணீர் வடிக்கிறார், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவர் பேசுகையில், நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க கூடாது என உலக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ராஜபக்சே ஆதரவாக பேசியவர் முத்தையா முரளிதரன். மேலும் முள்ளிவாய்க்காலில் போர் நடந்த போது நிம்மதியாக தூங்கினேன் என அவர் பேசினார்.

அதே போல் பிரிட்டிஷ் பிரதமர் கேம்ரூன் இலங்கைக்கு வந்த போது அங்கிருந்த பெண்கள் தனது கணவர், மகன் உள்ளிட்டோர்களை காணவில்லை என கூறிய போது இவர்கள் நாடகமாடுகிறார்கள் என கூறியவர். மேலும், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் இருந்தால் போரே நடைபெறாது என ராஜபக்சே சான்றிதழ் வழங்கினார். 800 விக்கெட் எடுத்தார் என்பதற்காக 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லபட்டது மறக்கடிக்கபட்டு உள்ளது. முரளிதரன் நீலி கண்னீர் வடிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதி மனித நேயமிக்கவர், எளிமையானவர்,முற்போக்காளர். இவர் இதில் நடிப்பது வேதனை அளிக்கிறது. விஜய் சேதுபதி வீட்டிற்கு சென்று வரும் 21ம் தேதி மலர் கொத்து கொடுத்து இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கேட்டு கொள்ள உள்ளோம்.