இராமலிங்க அடிகள் பிறந்த தினம்

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்” இராமலிங்க அடிகள் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சிதம்பரம் அடுத்த மருதூரில் பிறந்தார்.

முருகன் பாடல்களை பாடிவிட்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்ட 9 வயது ராமலிங்கம், மடைதிறந்த வெள்ளமென சொற்பொழிவாற்றி வியப்பில் ஆழ்த்தினார்.

பசி, பட்டினி, பிணி, கல்வியின்மையால் மக்கள் துன்புறுவதைக் கண்டு துடித்தார். ‘ஜீவகாருண்யமே மோட்சத்துக்கான திறவுகோல்” என எடுத்துக் கூறினார்.

‘சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை 1865ஆம் ஆண்டு உருவாக்கினார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வகுத்தார். ‘கடவுள் ஒருவரே, உயிர் பலி, புலால் உண்பது, ஜாதி, மத, பொருளாதார வேறுபாடுகள் கூடாது. பிற உயிர்களை தன்னுயிர்போல் கருத வேண்டும். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது உயர்வான புண்ணியம்” என உபதேசித்தார்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று கூறிய இராமலிங்க சுவாமிகள் 1874ஆம் ஆண்டு மறைந்தார்.