தொற்று அதிகரிக்க வழிவகுக்கும் போலி இ – பாஸ்கள்

மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் நள்ளிரவில் வரும் சொகுசு பேருந்துகளால் கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவையில் நாளுக்கு நாள்அதிகரித்து வந்துகொண்டிருக்கும் நிலையில் வெளியில் இருந்து வருபவர்களால் இது இன்னும் அதிகரிக்க கூடாது என்பதற்காக மாநில, மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு,பகலாக தீவிரமான வாகன சோதனை நடைபெற்றுவருகிறது. இருப்பினும் நள்ளிரவில் மட்டும் சொகுசு பேருந்துகளின் இயக்கம் அதிகமாகஉள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று மஹாராஷ்டிரவில் இருந்து 25 பயணிகளுடன் கோவையின் எல்லையில் நுழைந்த பேருந்தை சோதித்த பொழுது, அதில் உள்ள பயணிகளின் இ பாஸில் மகாராஷ்டிரா முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடாமலும் நீலம்பூர் பகுதியில் பயணிகள் இறங்கி மாநகர பகுதிக்குள் நுழைந்தனர். இதே போல் தினந்தோறும் கோவை மாவட்டத்தில் சொகுசு பேருந்துகள் போலி இ பாஸ் மூலம் நுழைந்து கொரோனா தொற்றை அதிகரிக்க செய்கின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு கோவை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பல மாநில எல்லைகளை கடந்து வந்த சொகுசுப்பேருந்து ஏன் எங்கும் சோதிக்கப்படவில்லை. இவர்களுக்கு போலி இ – பாஸ் பெற்றது எப்படி ? என்று கேள்விக்குறியாகவே உள்ளது.