உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

கோவை மாநகராட்சி, கல்கி கார்டன் பகுதியில் ரூ.64.90 லட்சம் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை  சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, உதவி ஆணையர்(தெற்கு)ரவி, மாநகரா பொறியாளர் லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக பரப்பளவிலும், மக்கள் தொகைப் பெருக்கத்திலும் மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்கி வருகிறது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஏராளமான திட்டங்களை தமிழக முதல்வர் தனிகவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் முதலடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு மேம்பாலங்கள், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கோவை மாநகராட்சியில் தொட்டராயன் கோவில் வீதி திட்ட சாலையில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.63.90 லட்சம் மதிப்பில் சி.பி.எம். கல்லூரி அருகில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட கோபுர விளக்குகளுடன் கூடிய தெரு விளக்குகளை பயன்பாட்டிற்கு சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கல்கி கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.64.90 லட்சம் மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, தொட்டராயன் கோவில் வீதியில் குறுக்கு சாலைகளில் ரூ.6.90 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.