ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை இலவச உணவு

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை கோவையில் உணவின்றி தவித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் சேவையை தொடர இருப்பதாக கோவையில் கேட்டரிங் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் மாதம்பட்டி R.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தொழில் நகரங்களான கோவை திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உணவகங்களை மட்டுமே நம்பி வாழும் பணியாளர்கள், இளைஞர்கள் மற்றும் வட இந்திய தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்றோர் பலர், சாலைகளில் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர்.

கட்டுமானதொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பலர், உணவு வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக
கேட்டரிங் ஓனர் அசோசியேஷன் சார்பாக தினமும், 2000 பேருக்கு மதிய உணவு மற்றும் சுமார் 1500 பேருக்கு இரவு உணவு என 4,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ‘ஈதல்’ என்கிற சேவை அமைப்பு துவங்கப்பட்டு அதன் மூலமாக சங்கத்தில் உள்ள, 125 உறுப்பினர்கள் தங்களது சொந்த பணத்தை சேர்த்து, கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உணவு தயாரித்து பின்னர் அதனை பார்சல்களாக்கி தினமும் ஆதரவற்ற மற்றும் வட இந்திய தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வழங்கி வருகின்றனர். இது குறித்து கேட்டரிங் ஓனர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் மாதம்பட்டி R. நாகராஜ் கூறுகையில், கோவையின் பல்வேறு பகுதிகளான சிவானந்தா காலனி, சாயிபாபா காலனி, சங்கனுார், வெள்ளக்கிணறு, அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டில் ஆதரவின்றி இருப்போரில், தினமும் மதியம், 2,000 பேருக்கு, மாலை, 2,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த சேவையை செய்து வருவதாக கூறிய அவர், இந்த ஊரடங்கு உத்தரவு காலம் உள்ள இந்த சேவையை தொடர உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் முறைப்படி அனுமதி பெற்று அவருடைய உத்தரவின் பேரில் இதனை செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.