அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற குழு அமைப்பு 

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும். கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் – நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.